2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து 26 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அர்ஜுனா விருதைப் பெற்றனர்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பங்களிப்பாளர்களுக்கு ஒன்றிய அரசு ஆண்டுதோறும் விருதுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
சிறந்த போட்டியாளர்களுக்கான ‘அர்ஜுனா விருது’, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆா்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட்டது.
கடந்தாண்டு ஆா்.வைஷாலியின் சகோதரரும், செஸ் போட்டியாளருமான ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிதி கோபிசந்த் சுவாமி - வில்வித்தை, ஓஜஸ் பிரவின் தியோட்டலே - வில்வித்தை, சங்கர் முரளி – தடகளம், பருல் சௌத்ரி - தடகளம், முகமது ஹுசாமுதீன் – தடகளம், ஆர் வைஷாலி - சதுரங்கம், முகமது ஷமி - கிரிகெட், அனுஷ் அகர்வாலா - குதிரையேற்றம், திவ்யகிருதி சிங் - குதிரையேற்றம், திக்ஷா தாகர் – கோல்ஃப், கிரிஷன் பகதூர் பதக் - ஹாக்கி, புக்ரம்பம் சுசீலா சானு - ஹாக்கி, பவன் குமார் - கபடி, ரிது நேகி - கபடி, நஸ்ரீன் - கோகோ பின்கி – லான் பவுல்ஸ், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் – துப்பாக்கி சுடுதல், இஷா சிங் - துப்பாக்கி சுடுதல், ஹரிந்தர் பால் சிங் சந்து - ஸ்குவாஷ், அய்ஹிகா முகர்ஜி - டேபிள் டென்னிஸ், சுனில் குமார் – மல்யுத்தம், ஆன்டிம் பங்கல் - மல்யுத்தம், நௌரெம் ரோஷிபினா தேவி - வுஷூ, ஷீதல் தேவி – பாரா வில்வித்தை, இல்லூரி அஜய் குமார் ரெட்டி - பார்வையற்ற கிரிக்கெட் மற்றும் பிராச்சி யாதவ் - பாரா கேனோயிங் ஆகிய 26 பேர் அந்தந்த விளையாட்டுகளில் சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அர்ஜுனா விருதினை பெற்றனர்.